அரியதாய் கிடைத்த ஒரு ஒய்வு நாள்
ஒரு கடற்கரையோரம்
அலையில்ல கடல் போல்
அமைதியாய் அமர்ந்திருந்தேன்
உலர்ந்து கிடக்கும் சருகினை
ஊதிக்கிளப்பும் காற்றினைப் போல்
அங்கே கடந்து போன காதல்(ர்)கள்
என்னை என் கடந்த கால
நினைவுக்கு கடத்தி செல்ல
மனதில் மறைந்து இருந்த
அவளின் நினைவுகள்,
மலர்கள் மலர்வதுப்போல்
என் நினைவில் மலர்ந்தது
இதே கடற்கரையோரம்
கரம் கோர்த்து, காதல் கதைப்பேசி
நாங்கள் பதித்து சென்ற
பாத சுவடுகள் பல்லாயிரம்
மூச்சுக்கு முன்னுறு முறை
என்னுடன் வாழப்போகும்
வாழ்கையை வண்ண வண்ண
ஓவியம் போல், வார்த்தையால்
வரைந்துக் காட்டுவாள்
கடற்கரை மணலில் வீடு கட்டி,
பேச்சினால் நாங்கள் வாழ்ந்த வாழ்கையில்
மக்கள் செல்வம் இரண்டோடு
பேரனும், பேத்தியும் உண்டு
அலையடித்து சிதைந்த
எம் மணல் வீடு போல்
காலம் என் காதலை சிதைத்தது
இணைபிரியா நடந்த எம் கால்கள்
சில இரும்பு கரத்தால்
திசைக்கு ஒன்றாக விலக்கப்பட்ட
இதோ இங்கே நானும், எங்கோ அவளும்
நினைவுகளின் மீட்சியால் விழி நனைய,
மனதில், எங்கோ ஒரு கடற்கரையோரம்,
அவளும் இதே நிலையில் இருப்பாளோ
எனும் விடை தெரியா கேள்வி எழ,
விழித்துடைத்து நடக்கிறேன்.

2 கருத்துகள்:
கருத்துரையிடுக