செவ்வாய், 24 ஜனவரி, 2012

விடுமுறை காலம்



நேர முள்ளின் வேக நகர்தலில்
கையில் வைத்த பனிகட்டியாய்
கரைந்தே போனதே, உறவுகளை காணும்
என் விடுமுறை பயணம்


உறவுகளை காணும் உற்சாகத்துடன்
உடன் கூடி வந்த என் கைப்பைகளும்
திரும்பி செல்லும் நாள் நெருங்கி
நெருக்குவதை கண்டு, கலக்கமாய்


காலத்தின் ஓட்டத்தினை கட்டி வைக்க, 
கயிறு ஒன்று கிடைக்குமா என
தமக்குள் பேசி, பேசி தவித்து போனது

விடுப்பின் காலம் விடை பெற,
கனத்த மனதுடன் திரும்பி
களைத்து வந்த எம்மை கண்டு,


எடுத்து செல்லும் பொருளின்
எடை அளவு கூடியதால், நான்
விடுத்து சென்ற 
மிட்டாய் பெட்டிகள்,

அங்காடியில் எம்மை வாங்கியபோது
உம் உறவுகளை மகிழ்விக்கும்
உரிய பொருள் நாங்கள் என
மகிழ்சியோடு காத்திருந்தோம்,


நீர் காணும் உறவுகளை எல்லாம் நாங்களும் கண்டு
மகிழ்ந்து, மகிழ்விக்க இருந்த எம்மை ஏமாற்றி
இப்படி இருட்டு மூலையில் இருத்தி சென்றது 
என்ன நியாயம் என வினாவுடன் விசும்ப


உறவுகளை கண்டு வந்த எமக்கே
இத்தனை கவலையென்றால்
காணாமல் இருக்கும் அவற்றின்
வேதனை எப்படி இருக்கும் என தெரிய


அவற்றின் கவலை தீர்க்கும் பதிலாய்
காத்திருங்கள், காலம் மீண்டும், 
உறவுகளை காண செய்யும் என்னும்
ஆறுதல் வார்த்தை சொல்லி,




அவற்றோடு சேர்ந்து,
உறவுகளை மீண்டும் காணும்
உன்னத நாளிற்க்காய் உவப்புடன்
நானும் காத்திருக்கிறேன்.

முகமூடி


நல்மனித இயல்பை நசுக்கி 
என் இருப்பை தொலைத்த
எனக்கு
ஊர் முன் உத்தமனாக நடிக்க வேண்டி ,  
காலத்தால்
எனக்கு ஒரு கட்டாயம் வந்தது

அதனால்,
அகத்தின் அழுக்கை, என் முகத்திரை
முத்திரையிட்டு காட்ட வண்ணம்
மூடி மறைத்திட
முனைப்புடன், 
தேடினேன் ஒரு முகமூடி


உண்மையற்ற வார்த்தைகள் பேசி
உவர்த்து போன என் வாயினை
உண்மையின் உறைவிடமாக்கி
உலகிற்கு,   
காட்ட உடனே வேண்டும் ஒரு முகமூடி

கெட்டதை மட்டும் நோக்கி கெட்டழிந்த, 
என் கண்களை, கண்ணியம் நிறைந்து
கனிவு காட்டும் கண்களாக காட்டிட
கடினமாய் தேடினேன் ஒரு முகமூடி

இன்சொல் கேட்க மறுத்து
மரத்துப்போன என் காதுகளை
எம் மாந்தருக்கு மாற்றி காட்ட
மறைவாய் தேடினேன் ஒரு முகமூடி
 
மூர்க்கமுடன் தேடியும் மூகமுடிகள் 
கிடைக்காத நிலை,
என்ன செய்வது,
ஏது செய்வது, ஏதும் புரியாமல்
குழம்பி போய், குறுகி கிடந்த சமயம்

உண்மையின் வெளிச்சம்,
என்னில் ஒளிவிட தொடங்கியது

பொய்மையின் பின்னால் போனால்
பல நூறு முகம் வேண்டும்,
ஆனால்
உண்மை பாதையில் உவப்புடன் நடக்க 
எனக்கு  ஒரு முகமே போதும் என்று

எண்ணத்தில் எழுந்த மாற்றத்தால்
நடிப்பிற்கு நல்லவனாக இருப்பதை தவிர்த்து, 
முகமூடி தேடும் என் முட்டாள், 
பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து    


எண்ணம், செயல்,
அனைத்திலும்
உண்மை மனிதனாக மாற 
உவகையுடன்
தொடங்கினேன்
என் புது முயற்சியினை................