அரியதாய் கிடைத்த ஒரு ஒய்வு நாள்
ஒரு கடற்கரையோரம்
அலையில்ல கடல் போல்
அமைதியாய் அமர்ந்திருந்தேன்
உலர்ந்து கிடக்கும் சருகினை
ஊதிக்கிளப்பும் காற்றினைப் போல்
அங்கே கடந்து போன காதல்(ர்)கள்
என்னை என் கடந்த கால
நினைவுக்கு கடத்தி செல்ல
மனதில் மறைந்து இருந்த
அவளின் நினைவுகள்,
மலர்கள் மலர்வதுப்போல்
என் நினைவில் மலர்ந்தது
இதே கடற்கரையோரம்
கரம் கோர்த்து, காதல் கதைப்பேசி
நாங்கள் பதித்து சென்ற
பாத சுவடுகள் பல்லாயிரம்
மூச்சுக்கு முன்னுறு முறை
என்னுடன் வாழப்போகும்
வாழ்கையை வண்ண வண்ண
ஓவியம் போல், வார்த்தையால்
வரைந்துக் காட்டுவாள்
கடற்கரை மணலில் வீடு கட்டி,
பேச்சினால் நாங்கள் வாழ்ந்த வாழ்கையில்
மக்கள் செல்வம் இரண்டோடு
பேரனும், பேத்தியும் உண்டு
அலையடித்து சிதைந்த
எம் மணல் வீடு போல்
காலம் என் காதலை சிதைத்தது
இணைபிரியா நடந்த எம் கால்கள்
சில இரும்பு கரத்தால்
திசைக்கு ஒன்றாக விலக்கப்பட்ட
இதோ இங்கே நானும், எங்கோ அவளும்
நினைவுகளின் மீட்சியால் விழி நனைய,
மனதில், எங்கோ ஒரு கடற்கரையோரம்,
அவளும் இதே நிலையில் இருப்பாளோ
எனும் விடை தெரியா கேள்வி எழ,
விழித்துடைத்து நடக்கிறேன்.
மனம் எனும் மாயப்பெட்டகம்
கண்ணில் தெரியா மனித மனதில் இறைவனும் எண்ணி, எண்ணித் தோற்ற
எண்ண முடியா எத்தனை ரகசிய அறைகள்
எண்ண முடியா ரகசிய அறையில்
பொத்தி வைத்துப் பூதம் காப்பதுபோல்
மறைத்து வைத்த எத்தனை எண்ணங்கள்
எண்ணங்களை எண்ணிக்கைப் படுத்த
இயன்றவரை முயலுவோம் என
எடுத்து வைத்தேன் ஏடு ஒன்றை.
வகைக்கு ஒன்றாக
வலம் வந்தவை இதோ,
பொறாமைத் தீயினால் பொசுங்கிப் போய்
மற்றவரை ஆள முடியா ஆற்றாமையால்,
அழுது புலம்பும் அழுக்கானவை.
நட்பின் நம்பிக்கையை நசுக்கிப் பார்க்கும்
நல்லிதயம் இல்லா நாற்றம் கொண்டவை
மூர்க்கத்தினை மட்டுமே மூளையில் கொண்ட
முடமான குணம் கொண்டவை.
அகத்தில் வெறுத்து, புறத்தில் சிரிக்கும்
புதை மணலின் நிலை கொண்டவை
அழுக்காறு கொண்டு புறம் பேசும்
நச்சுப் பாம்பின் பிரதிபிம்பங்கள் .
வகைக்கு ஒன்றாய் வலம் வந்த பின்
மனம் எனும் மாயப் பெட்டகம், தன்னுள்,
பொதித்து வைத்த பொதி மூட்டையில்,
மெல்ல எட்டி நான் பார்க்க,
அதில் சீறும் புலியின் சீற்றத்துடன்
தன் இருப்பை நிலை நிறுத்தும்
இடைவிடாப் போராட்டத்தில்
இருந்தது நல்லெண்ணம்
இத்தனை நச்சுப் பொதிகையில் நடுவே
நீ இருந்தும், மூழ்காமல் முழுமையாய்
இருக்கும் சாத்தியம் எப்படி எனும்
ஐயப்பாட்டினை அதனிடம் கேட்க
அதற்கு மறுமொழியாக
மனித மனம் எல்லாவற்றிலும்
இணை பிரியா இருப்பு நான்
மனங்களில் என் இருப்பின் அளவில்
ஏற்றத் தாழ்வுகள் இருக்குமே தவிர
இருப்பில்லா நிலைக்கு என்றுமே
நான் இருந்ததில்லை
பல நச்சு எண்ணங்களால்
மூச்சுத் திணறும் சில முழு மனதும்,
உயிர் மூச்சுப் பெறுவது இதனால்தான் என
விடை சொல்லி எனக்கு விடை கொடுக்க
இறைவனின் படைப்பில் இப்படியும்
ஒரு நிகழ்வு இருப்பதனால்தான், மனிதம்
இன்னமும் மறையாது இருக்கிறது என்ற,
எண்ணத்துடன் எடுத்து வைத்தேன் என் ஏட்டினை.
http://www.vallamai.com/special/pongal/pongal-2012/1100/