திங்கள், 15 அக்டோபர், 2012

தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்



அன்று, தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
இறையின் வார்த்தையை
இம்மியளவும் தவறாமல்
கேட்டும், தட்டியும் எனக்கானவை
கிடைக்கவுமில்லை, திறக்கவுமில்லை

முயற்சிகள் தோற்றுபோய்
இறைவாக்கு எனக்கு மட்டும் 
வெறும் வாக்காய் ஆனதை
எண்ணி ஏங்கி தவித்தேன்

தவிப்பின் தனிமையில்
தனித்த நான், என் இருப்பின்,
வெறுமையால் மருகி மயங்கினேன்

மயங்கிய என்னை உலுக்கி
எழுப்பியது  ஒரு முதிர்கரம்
என் இருப்பின் நிலையை
தன் மெல்லிய குரலால்
மெதுவாய் கேட்டது
 

இரக்கமற்ற இந்த உலகில்
எனக்காய் கொடுக்கவும், திறக்கவும்
யாருமில்லை, எதுவுமில்லை என
வெறுப்போடு வெகுண்டு சொன்னேன்

மெல்லிய புன்னகை பூத்த முதியவர் 
அனுபவம் நிறைந்த தன் குரலால்
அன்புடன் என்னை நோக்கி 

இறையின் வார்த்தைகளின்
இரண்டே வரிகளை இறுக்கமாக,
பிடித்த நீ, அவரின் மூன்றம் வரிகளை
முழுவதாய் மறந்ததுயேனோ என்றார் 

தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்
என்ற வாக்கும் அவருடையதுதான்
உனக்கான கதவை நீ தட்டு
உனக்கான மனிதரிடம் நீ கேள்

அன்று உனக்காக திறக்கபடும்,
கொடுக்கபடும் என உண்மை வரிகளை  
உணர்ச்சியோடு சொன்னார்

உண்மையை உணர்த்த நான்
இறையிடம் மன்னிப்பு கோரி
முழு நம்பிக்கையோடு எனக்கான கதவையும், 
எனக்கான மனிதரையும் தேடினேன், 
கண்டடைந்தேன் இன்று.   


கருத்துகள் இல்லை: